Sunday, October 25, 2009

தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை:

* தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ் வழிய மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

* ஒரு நாளைக்கு ஒரு பாட வேளை நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது. வீட்டுப் பாடம், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற தேவைகள் இருந்தால் பகல் உணவு வேளை, மாலை பள்ளி விட்ட பிறகும் கூடுதல் நேரம் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

* கட்டுரைகள் 99% வீதம் புரிந்து கொள்ளத்தக்கதாகவே உள்ளன.

* மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பயன்படுத்திப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது.

* புதுக்கோட்டை மாவட்டம் (அதாவது உள்ளூர் தகவல்கள்), தமிழ்நாடு, இந்தியா குறித்த செய்திகள் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

* எடுத்துக்காட்டுப் பயன்பாடுகள்: "நாட்டுக்குழைத்த தலைவர்கள்" என்று போட்டி வைத்தால் மாணவர்களே காமராசர், நேரு என்று தேடி அக்கட்டுரைகளை அச்சிட்டு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். "காவிரி தன் வரலாறு கூறுதல்" என்று தலைப்பு வைத்தால் காவிரி ஆற்றுக் கட்டுரைக்குள் புகுந்து குடகு, பூம்புகார் என்று ஒன்றுக்குள் ஒன்றாக தொடர் கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விக்கி வரவுக்கு முன் பாடநூல் அல்லது நூலக நூலில் உள்ள ஒரே மாதிரியான கட்டுரைகளையே எல்லாரும் படித்ததாகவும் தற்போது பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் படித்துப் படைப்பூக்கத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, இது வரை 20 வரிகள் எழுதிக் கொண்டிருந்தவர்கள் 60 வரிகள் உள்ள அளவுக்கு தகவல் சேர்த்து எழுதுகிறார்கள் (இது விரிவான கட்டுரைகள் எழுத வேண்டிய தேவையை உணர்த்துகிறது)

* தமிழ் விக்சனரியையும் பயன்படுத்துகிறார்கள்.

ஆக மொத்தம் விக்கி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இன்னும் மென்மேலும் விக்கியை வளர்த்து எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இது போன்று பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியா பயன்படத் தொடங்கி உள்ளது மேலும் முனைந்து பங்களிக்க ஊக்கமாக இருக்கும். திரு. சோதிமணி அவர்களைப் போல் முன்மாதிரியாகத் திகழும் நல்லாசிரியர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பார்க்க: பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு குறித்த தமிழ் விக்கிப்பீடியா உரையாடல்.

இச்செய்தியை நேரில் கண்டு எழுதிய லக்கிலுக்குக்கும் பதிப்பித்த புதிய தலைமுறை இதழுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments:

Info-farmer said...

திரு. சோதிமணியின் வழிமுறைகளைப் பற்றி, எனக்குத் தெரிந்த ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறுவேன். நல்ல விழிப்புணர்வு.ஓங்குக தமிழ் வளம்!

a.r.mohamad iqbal said...

nandri nalla muyarchi

Post a Comment